கவிஞர் ஆசையின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் இன்று முக நூல் மூலமாக முகம் காட்டுகின்றன. ’அண்டங்காளி’ அதில் ஒன்று. முதலில் அவற்றிற்காக என் வாழ்த்துகள்.
இயற்கை மனித குலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. எப்போதும் இருக்கும். இயற்கையின், அல்லது இயற்கை நிகழ்வுகளின் பேருண்மையினைக் கண்டு பிடிப்பதே, காரண காரியத்தை ஆராய்வதே மனித குலத்தின் தொடர்ந்த தேடலாக இருக்கிறது. அந்த வகையான, காரண- காரியத் தேடல் என்பது ஆன்மீகவாதிகள் ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகளின் தேடல்.இதில் பின் இரண்டு வகையினரின் தேடல் என்பது பருண்மையானது.ஆன்மீக வாதிகளின் தேடல் முற்றிலும் தர்க்கங்களின் அடிப்படியில் அனுமானிக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் முடிவுற்ற பாடுமில்லை முடிவுறுகிற விஷயமும் இல்லை. அது முடிவுறாதது என்கிற புரிதலுமே ஒருவகைத் தேடலுடன் சேர்ந்ததுதான், அதனைப் புரிந்து கொள்கிறவர்கள் கவிஞர்களே. அவர்களே இயற்கையின் இந்தக் கூத்தை ஒரு சக்தியின் கூத்தாக உருவகித்து அதன் எல்லையின்மையையும் முடிவின்மையையும் உணர்ந்து கொள்கிறார்கள்.
”அன்புறு சோதியென்பார்- சிலர் ஆரிருட் காளியென்றுனைப் புகழ்வார்” என்றும்,அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்ததாயின் கைப்பந்தென ஓடுமடா –” என்றும் தன் முன்னோடிகளின் நீட்சியாகத் தானும் பாடவும் ஆரம்பிக்கின்றான். இது கவிஞர்கள் ஓடி ஓடி அலுக்காத பாதை. சபரிநாதன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல இது காளிதாசன், பாரதி எனப் பலர் வியந்துருகிக் கலந்து, புணர்ந்து கும்பிட்டுக் கூடிக் களித்த ஒரு வடிவம். கவிஞர்ஆசை அதன் இப்போதைய நீட்சி. அவரே முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல இது எவ்வளவு தூரம் இப்போதையக் கவிதைகளுடன் பொருந்திப் போகும் என்று பார்க்க வேண்டும்