இந்தக் கவிதையின் முதல் பத்திக்கும் இறுதி பத்திக்கும் இடையில்தான் ‘குவாண்டம் செல்பி’ கவிதை உலகம் தன்னை சுருக்கி விரித்து நிகழ்த்திக் காட்டுகிறது.
ஒரு கவிதையை அணுகும் பார்வைக்கோணம் நிச்சயம் வாசகனை சார்ந்தது. எனக்கு ‘குவாண்டம் செல்ஃபி’யை வாசிக்கும்போது ஒரு குறு நகரச் சிறுவனின் கண்ணோட்டத்தில் இக்கவிதைகள் அமைந்துள்ளதாக தோன்றியது. புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ என்ற சிறுகதையில், சவாகாசமாய்த் தகரப் பீப்பாயைக் கையில் பிடித்துபடி செத்துக்கொண்டிருக்கும் கிழவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையை போன்ற சிறுவன் அவன். நவீன உலகின் எவ்வித உளவியல் கோட்பாடுகளுக்கும் தர்க்கத்துக்கும் உள்ளாகாத சிறுவன் அவன். இத்தகைய தீங்குகளில்லாமல் உலகை தரிசிக்கும் தன்மை இக்கவிதைகளின் ஆன்மாவாக உள்ளது.