இந்த நூல் பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி நகரத் தமிழ் மக்களின் சமூக வாழ்க்கையை ஆழமாக ஆய்வு செய்கிறது. புதுச்சேரியிலிருந்து ஆசியா மற்றும் பிரான்சிற்கு தமிழ் வணிகர்கள் செய்த துணி வணிகம் குறித்து விவரிக்கிறது. வலங்கை, இடங்கை சாதியினரிடையே ஏற்பட்ட கலகங்கள், பிரெஞ்சு நிறுவன காவல் துறை மூலம் அடக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை பராமரித்து வந்துள்ளதும், இந்து, முசுலிம், கிருஸ்தவ மக்களின் சமூக வாழ்க்கையையும் எடுத்துக்கூறுகிறது. புயல், வெள்ளம், போர், படையெடுப்பு, படைமுகாம்கள் அமைத்தல், முற்றுகை மற்றும் சமூகக் கலகங்கள் ஆகியவற்றின் மூலம் பெருமளவில் ஏற்பட்ட பேரிடர்கள், சேதங்கள், துயரங்கள் குறித்தும் விளக்குகிறது. கைவினைஞர்கள் புதுச்சேரியிலிருந்து மோரீசியசிற்கும். ரீயுனியன் தீவுகளுக்கும் புலம் பெயர்ந்த விவரங்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.