நம்மை அச்சுறுத்தும் அனைத்துவிதமான அலர்ஜிகள் குறித்து தெரிந்துகொள்ளவும்
தெளிவடையவும் ஒரு மருத்துவ வழிகாட்டி.அறிவியலைப் பொருத்தவரை தூண் முதல்
துரும்பு வரை எங்கும் நிறைந்திருக்கும் ஒரே விஷயம், மாசு மட்டும்தான். பஞ்ச
பூதங்கள் அனைத்தும் அழுக்கடைந்து, பல்வேறு நோய்களைப் பரப்பும்
தொழிற்கூடங்களாக மாறிவிட்டன. இனி நாம் எப்படி சுவாசிப்பது? எப்படி உண்பது?
எப்படி உயிர் வாழ்வது? மிகப் பெரிய அளவில் மாறிப்போயிருக்கும் நம் இன்றைய
வாழ்க்கை முறை பலவிதமான அலர்ஜிகளை நமக்குப் பரிசாக அளித்திருக்கிறது.
அவற்றிடமிருந்து தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. எனக்கு எது
அலர்ஜி என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? எப்படி அதிலிருந்து நிவாரணம்
பெறுவது? அலர்ஜிக்கு சிகிச்சை இருக்கிறதா? ஆம் எனில் எந்த மருத்துவரை
அதற்கு நாடவேண்டும்? அலர்ஜி குறித்து உங்களுக்குள் எழும் அத்தனை
சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் எளிமையாகவும் ஆறுதல் அளிக்கும்
வகையிலும் விடையளிக்கிறார் பிரபல எழுத்தாளரும் மருத்துவருமான டாக்டர் கு.
கணேசன்.