இந்த யுரேனியத்தின் மூலப்பொருள்கள் ஜாதுகுடா மலைப்பகுதிக்குள் நிரம்பி இருப்பதை கண்டுபிடித்தப்பின், இந்த மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்திருக்கிறது. இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த அந்த மக்கள், இன்று மிகவும் துயரமான வாழ்வுக்குள் சிக்குண்டதற்கு இந்த யுரேனியம்தான் காரணமாக அமைந்தது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது அப்பகுதி தாமிரம் கிடைப்பதாக அறியப்பட்டு, தாமிர சுரங்கங்கள் அமைக்கப்பட்டது. தாமிரத்திலிருந்து அடுத்தக்கட்டமான யுரேனியத்தை பிரிட்டிஷ்காரர்கள் படித்தறியாத காரணத்தால் அது அந்த அளவிலேயே நின்றது. பின்னர் யுரேனியம் கிடைக்கத் தொடங்கிய பின்புதான் அல்லது அது கண்டறியப்பட்ட பின்தான் இந்த மக்களின் வாழ்வும் சூறையாடப்பட்டது. அவர்களின் வளமான ஆரோக்கியமும் கொள்ளையடிக்கப்பட்டது.