எழுத்தாளர் வண்ணதாசனின் வரிகள் இவை. உலகில் உள்ள உயிரற்றவை, உயிருள்ளவை அனைத்தையும் இயற்கை தன் தொப்புள்கொடியால் பிணைத்துவைத்திருக்கிறது. ஒன்றோடொன்று தொடர்புடைய அந்தக் கண்ணிதான் பிரபஞ்சத்தின் அச்சை இறுகப் பிணைத்துச் சுற்றவைக்கிறது. காலம், உயிருள்ளவற்றிடமும் உயிரற்றவற்றிடம் சமநிலையைக் கலைத்துப்போடுகிறது. வண்ணதாசன் உயிருள்ள, உயிரற்ற என்ற அந்தப் பாகுபாடுகளை அன்பின் தராசில் சமமாக்குபவர். குழந்தைகள் காத்திருக்கும் பேருந்துநிலையத்தில் குழந்தைகளைப் பார்க்கும் கண்கொண்டே புளியமரத்தையும், பயணிகள் இருக்கையையும் பார்க்கும் கண்கள் வாய்க்கப்பெற்றவர்.
வாழ்வின் ஒவ்வொரு தருணமும் நிகழ்த்தும் தரிசனத்தை வழிப்போக்கனாய்ப் பார்ப்பதுதான் அவரது எழுத்துகள். பெண்பிள்ளைக்கு உச்சி வகிடெடுத்து, தலை சீவிவிட்டு ரிப்பன் கட்டி பள்ளிக்கு அனுப்பிய பிறகு, சீப்பைத் தலையில் செருகியபடியே கை அசைக்கும் தாயின் சித்திரத்தை எழுத்தில் நிறைப்பவர். முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவைத்த மகனின் புகைப்படத்தை, சட்டைப்பையில் பத்திரப்படுத்தியபடி செல்லும் முதியவரின் துயரமான அன்பின் நியாயத்தை வெளிப்படுத்துபவர். கண்ணீர் எப்படி ஆனந்தம், துக்கம், கோபம் எனப் பல உணர்வுகளின் அறிவிக்கப்படாத பிரதிநிதியாகிறதோ, அதைப்போல்தான் வண்ணதாசனின் எழுத்துகளும். கல்மண்டபத் தூண்கள், தபால்பெட்டிகள், பறவையின் சிறகு, பூனையின் மியாவ், வாதாம் மர இலை, நாடோடியின் கால் தடம் எனக் காலத்தின் மீதான அத்தனை தடங்களையும் சொற்களால் வண்ணம் தீட்டிய ஓவியன்.