நான் எல்லோரையும் காதலித்துக்கொண்டும் எல்லோராலும் கைவிடப்படும் ஒருவனாகவும், எல்லோரையும் விரும்பிக் கொண்டு எல்லோராலும் வெறுக்கப்படுகிற ஒருவனாகவும் தானே இருக்கிறேன். நான் கொண்டாடப்படுகிற போதெல்லாம் நிராகரிக்கப்படுகிறவனாகவும், ஒளியிலே தெரிவது என்று நான் ஒரு கதை எழுதும் போது, அதே கதையை யாராவது நிழலிலே தொலைவது என்றுதானே மொழிபெயர்த்துக்கொண்டு இருந்தார்கள்.
நான் இதுவரையிலும் எதையும் திட்டமிடவில்லை . எதையும் இலக்கு எனக் கொண்டு என் வாழ்வையோ, என் விரலையோ நகர்த்திக் கொள்ளவில்லை. நான் எந்த இடத்திலும் நின்றதே இல்லை. நின்று கொண்டு இருப்பதை விடச் சென்றுகொண்டு இருப்பவனாக இருக்கிறேன். ஒரு தாவரம் போல, அல்லது எனக்குப் பிடித்த வேப்ப மரம் போல, அதனதன் பருவம் சார்ந்து வெயிலும் வெயில் சார்ந்துமாக நின்று நிழலும் நிழல் சார்ந்ததை எழுதிக்கொண்டு வருகிறேன்.
- வண்ண தாசன்