இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. மங்கள் பாண்டே, ஜான்சி ராணி, நானா சாகிப், தாத்தியா தோபே போன்ற நாயகர்களின் தீரமிக்க போர்க்குணம், ஆங்கிலேயக் கோட்டையின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்தது.
1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தன்னெழுச்சியானதா? இதில் மதத்தின் பங்கு என்ன? பரவலாகப் போராட்ட அலை ஹிந்துஸ்தானம் முழுவதும் பரவியபோதும், புரட்சி நசுக்கப்பட்டதன் பின்னணி என்ன? தோல்விக்கு என்ன காரணம்? 1857 எழுப்பும் கேள்விகள் நூற்றைம்பது ஆண்டுகள் கழிந்த பின்பும் உயிரோட்டத்துடன் உள்ளன.
சிப்பாய் புரட்சியின் ஒவ்வொரு அசைவையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் உமா சம்பத். வர்த்தகம் செய்வதற்காக அடியெடுத்து வைத்த கிழக்கிந்திய கம்பெனி, ஒட்டுமொத்த ஹிந்துஸ்தானத்தையும் அடக்கி ஆண்ட சரித்திரமும் இதில் அடங்கியுள்ளது.