பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய "தொட்டால் தொடரும்" ," கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள், நாவல்கள்,தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரயேத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களின் தொகுப்பு பிருந்தாவனமும் நொந்த குமாரனும். காதல், குடும்பம், கிரைம் பின்னணியில் கதை பின்னுவது பட்டுக்கோட்டையாரின் கோட்டையாக இருந்தாலும், சிரிக்க வைக்கும் பணி சீரிய பணி என்பதை நன்கு உணர்ந்தவர். கல்லூரியில் மேடை நாடகங்கள் எழுதிய காலம் தொட்டு தன்னைக் கவர்ந்த கலை, இலக்கிய நாடகத்துறை விற்பன்னர்களின் நகைச்சுவை உணர்வால் உந்தப்பட்டு எழுதிய 4 நாவல்களின் தொகுப்பு இது. குறுக்கு வழியில் இலட்சாதிபதியாகி விடலாம் என்ற குறிக்கோளுடன் பட்டினத்தை நோக்கிப் படை எடுக்கும் சேட்டை கோபி போன்ற குணாதிசயம் கொண்டவர்கள், தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் சதா சோதனைக்கு உள்ளாக்குவர் என்பதை நகைச் சுவையான வர்ணனைகள், காட்சியமைப்புடன் நளபாக விருந்து படைத்திருக்கிறார் ஆசிரியர்.