‘எம் கலிப்பாவம் தீர்க்க உங்கள் புலிப்பாதம் பற்றினோம்'
என்கிறது புலிப்பாணி சித்தரை வணங்கி வழிபடுவதற்கான தியானச் செய்யுள்.
போகமுனிவரின் சீடரான இவர் குருவை மிஞ்சிய சீடராக வைத்தியத்திலும் ஜாலங்கள்
செய்வதிலும் வல்லவராகத் திகழ்ந்த சித்தர் ஆவார். கல்பம் உண்டு காய சித்தி
பெற்று ஞானப்படிகளைக் கடந்த சித்தர் புலிப்பாணி. பிறக்கின்ற ஒவ்வொரு
மனிதனும் அவனது கிரக அமைப்புகளுக்கேற்ப ஆயுள் முடிந்து இறக்கிறான் என்ற
சோதிட சாஸ்திரத்தை அறிந்து விளங்க வைத்த மகாசித்தர் இவர். பூசை செய்து
அமிர்த பானத்தை சுவைத்தவர்களது அதிகாரம் இவ்வுலகில் எந்நாளும் சாவது இல்லை
எனும் மந்திரக்கலையை நன்குரைத்தவர்.
தண்டாயுதபாணியின் பேரரருள் பெற்ற சித்தர். பழனி முருகனின் நவ பாஷாணத்
திருமேனி அமைய காரணமாய் துணை நின்ற மாயச்சித்தர் புலிப்பாணி. புலிப்பாணிச்
சித்தரின் வாழ்வும் ரகசியமும் யாவர்க்கும் விளங்கிட இந்நூலை மகாசித்தரின்
பாதம் தொட்டு எழுதி அர்ப்பணிக்கும் பாக்கியம் எனக்கு இட்டியது இறையருளே!