‘நாங்களா சாராயம் குடிக்கச்
சொன்னோம்?’ எனக் கேட்கிறார் தமிழ்நாட்டின் ஓர் அமைச்சர். அப்படியானால்,
நாங்களா உங்களை சாராயம் விற்கச் சொன்னோம்? மதுக்கடைகளைத் திறந்தே ஆக
வேண்டும் என, எந்த ஊரிலாவது மக்கள் சாலை மறியல் செய்தார்களா? யாரைக் கேட்டு
எங்கள் ஊர்களில் சாராயக் கடையைத் திறந்தீர்கள்? உங்களுக்கு என்ன அதிகாரம்
இருக்கிறது? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டம் இயற்றத்தான்
சட்டமன்றம்; சரக்கு விற்க அல்ல! ‘கள்ளச் சாராயத்தைக் குடித்து மக்கள்
சாகிறார்கள். அதனால்தான் அரசு டாஸ்மாக்கை நடத்துகிறது’ என மக்கள் மீது
கரிசனம்கொள்கிறீர்கள். அதெல்லாம் கள்ளச்சாராயம் என்றால், டாஸ்மாக்கில்
விற்பது என்ன சார்... சத்து டானிக்கா? தமிழ்நாடு முழுக்க பெண்டாட்டி,
பிள்ளைகளை அநாதைகளாகத் தவிக்கவிட்டுச் செத்துப்போன லட்சக்கணக்கானோர்,
உங்கள் சத்து டானிக்கை அருந்தித்தான் உயிர் இழந்தார்கள் என்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா? அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் சிதைந்து, நரக
வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் மனிதர்களின் உடலை
உருக்குலைப்பது உங்கள் நல்ல சாராயம்தான் என்பதை உணர்கிறீர்களா?