மக்களின் தேவையறிந்து சேவை செய்ய முயலும் மருதிருவரை வீழ்த்த யாருடனும் கூட்டு சேர்ந்து குலை அறுக்கும் அரசியல் சுகவாசிகள் அப்போதும் இருந்தார்கள் என்பதைப் படிக்கும் போது நெகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.
தாங்கள் கொண்ட கொள்கையில் விடா முயற்சியுடன் தங்கள் உயிரையும் தங்கள் குலக் கொழுந்துகளையும் சுதந்திரப் போருக்கு விடியலை/வெளிச்சத்தை ஏற்படுத்திய முதல்வர்கள் மருதிருவர்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும் இந்நூலில் “திருக்கோயில் திருப்பணிகள்” தலைப்புள்ள செய்திகளைப் படிக்கும் போது அவர்களின் “ஆன்மிகப் பணி” போற்றுதலுக்குரியதாய் உள்ளது. சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்த சுமார் 85 திருக்கோயில்கள் வரை அவர்கள் செய்த பணி இன்னும் அவர்களது புகழை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
மருது சகோதரர்களைப் பற்றி பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நூல் எளிமையாக இருக்கிறது.
புதர் மறைவிலிருந்து தாக்குதலுக்குத் தயாரான புலியின் வாலைப் பிடித்து அடித்துக் கொன்ற வீரம் வியக்க வைக்கிறது.
மருதிருவர்களின் தீர்க்கமான சுதந்திர வேட்கைக்கு “ஜம்புதீபப் புரட்சி பிரகடனம்” இன்றும் இந்திய சுதந்திரப் போருக்கு உணர்ச்சியூட்டிய முதல் பிரகடனமாக இருப்பது ஒன்றே சான்று.
சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம், கிறித்துவ, இசுலாமியர்களையும் ஆதரித்து அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்த மருதுபூபதிகள் ஆட்சியாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நல்ல முன் உதாரணம்.
லதா ஆறுமுகம் எழுதி வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம் வெளியிட்டுள்ள மருதிருவர் நூல்,மருதிருவர் குறித்த பல தகவல்களை நமக்குத் தருகிறது. கடைசிப் பக்கங்களில் மருதிருவர் தொடர்பானசில புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருப்பது நன்றாக இருக்கிறது. தேனி. பொன். கணேஷ்.