ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த
மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம்
எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு
சுவார்ஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள்
எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம்
எப்படிச் சுழித்துக்கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவரஸ்யமாக எனக்கு
இருந்தது.
நடந்ததைத் திருப்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே நடந்த நிகழ்ச்சிகளை
இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்களிடமும் பேசுவதற்கு நிறைய
வைத்திருக்கிறார்கள் அவர்களின் மொழி எனக்கு கை வந்திருக்கிறது ஆகவே இந்தத்
தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாகிறது.