தழைத்தோங்கும் தமிழ்மொழியின் உயர்விற்கும் மேன்மைக்கும் சான்றாகத் திகழ்வது
திருமுறை இலக்கியங்கள். திருமுறை இலக்கியங்கள் பன்னிரண்டனுள்
பதினொன்றாவதாக விளங்கும் 40 சிற்றிலக்கியங்களின் தொகுப்புகளில் ஒன்றாக
இருப்பது பட்டினத்தடிகளாரின் பாடல்கள். உலகியல் தானமும் உள்ளொளி ஞானமும்
ஒருங்கே அமைந்த தமிழ் வேதத் தத்துவங்களாக ஒளிர்பவை. முழுமுதற் கடவுளின்
ஆற்றலையும், வரம்பிலா அருளாட்சியின் போற்றுதலையும் ஒருங்கே கொண்டு ஞான
நிலையில் விளக்க முயற்சி செய்யும் பாடல்களின் தொகுப்பே பட்டினத்தார்
பாடல்கள். சைவ சமயத்தின் அருமை பெருமைகளை விளக்கும் தரத்தன. பெருந்துறவு
நிலையிலிருந்து விளம்பிய ஞானப் பனுவல்கள் அவற்றில் ஆய்வுப் பெரும்பணியில்
மலர்ந்ததுவே பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்னும் இந்நூல்.
"பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப்பிள்ளையைப்போல யாருந் துறக்கை
அரிதரிது” என்று தாயுமானவரால் புகழ்ந்துரைக்கப்பட்ட பெருநிலை வாய்ந்தவர்
பட்டினத்தடிகள். காவிரிப்பூம் பட்டினத்தில் பிறந்தவர் என்பர். பெருந்தன
வணிகக் குலத்தில் பிறந்து அனைத்தையும் துறந்து ஆண்டவனின் அருளில்
கரைந்தவர். வரகுணை பாண்டியனார் காலமான கிபி.9ஆம் நூற்றாண்டினர் என்பர்.
அரசராயிருந்து ஆண்டியான பத்திரகிரியார் இவருடன் வாழ்ந்தவர் என்பர்.