புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் கனவு அது.
தமிழ் ஆய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்.
அது ஒரு காலம். தமிழ் நாட்டுக்கு மதராஸ் மாஹாணம் என்ற பெயர்தான் வேண்டும் என்று வலியுறுத்திய காலம். தமிழ்நாடு என்று பெயரை மாற்றினால் மதராஸ் மாஹாணத்தில் வாழும் தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள், மார்வாடிகள், ஏனையோர் எல்லாம் தாம் அந்நியர் என்று விரட்டப் படுவோமோ என்று அஞ்சுவார்கள் என்பதனால், பெயரை மாற்றக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி குதித்த காலம்.
பம்பாய் ராஜதானி குஜராத், மஹாராஷ்ட்ரா மாஹாணங்களாகப் பிரிவதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, மதராஸ் ராஜதானி, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பிரிவது பொறுக்கவில்லை.
மதராஸ் மாஹாணம் தமிழ்நாடு ஆனதையும், மதராஸ் பட்டணம் சென்னை மாநகர் ஆனதையும் கடுமையாய்க் கிண்டலடித்தவர்கள் இன்று பம்பாயை மும்பை என்கிறார்கள். மைசூர் மாஹாணத்தைக் கர்நாடகா என்கிறார்கள். பெங்களூரு, கொல்கொத்தா என்ற பெயர் மாற்றங்களெல்லாம் இவர்களுக்கு வெல்லமாய் இனிக்கின்றன.
இன்னும்கூடச் சென்னை மாநகரை மெட்ராஸ் என்று மட்டுமே வீராப்பாய்ச் சொல்லுபவர்கள் ஐ.ஐ.டி. மெட்ராஸ்காரர்கள்.
சென்னையிலிருந்து பறக்கும் வெளிநாட்டு விமானங்கள் எல்லாம் தமிழில் அறிவிப்பு செய்வதைக் கண்டித்து இந்தியில் அறிவிக்க வைக்கும் அறிவாளிகள் இன்றும் இங்கு உண்டு.