ஆற்று வரியைத் தொடர்ந்து அவன் கானல் வரிப் பாடல்கள் பாடினான்; அவற்றிலும் இத்தகைய முரண் பாடுகள் அமைந்துவிடுகின்றன.
தலைவன் களவு ஒழுக்கத்தில் அவளைச் சந்தித்துத் தன் காதலைத் தெரிவிக்கிறான். அச்செய்திகளைத் தோழி விவரிக்கின்றாள்.
“தலைவியின் முன் கடல் தெய்வத்தைச் சான்றாகக் காட்டித் தலைவன் தன் உறுதியை உரைத்தான். அவன் பின் அவளைத் தொடர்ந்து மணம் செய்து கொள்ள வில்லை” அதைச் சுட்டிக் காட்டுகிறாள் தோழி. “காதலராகிக் கடற்கரைச் சோலையில் கையுறை தந்து எம்பின்னால் வந்தவர் இன்று யாரோ போல் நடந்து கொள்கிறார்” என்பதும் தோழியின் அறிவிப்பு.
“நாங்கள் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பி விடுபவர்கள் மற்றும் மறுத்துக் கூறும் ஆற்றலும் எங்களுக்கு இல்லை” என்கிறாள் தோழி.
இம்மூன்றும் தலைவன் தலைவியரின் காதல் அறிமுகச் செய்திகள் ஆகின்றன; இவை தோழியின் கூற்றில் அறிவிக்கப்படுகின்றன; பின்பு நடந்தது யாது?
தலைவியின் பெருமையைத் தலைவன் விரித்துரைப்பன பின் வரும் பாடல்கள். இவை தலைவன் கூற்றுகள்:
“கண் செய்த நோய் அவள் அணைப்புதான் தீர்க்கும்; நோய்க்கு அவள் காரணம்; அது தீர்க்கும் மருந்து அவள் முயக்கே ஆகும்”
“கடற்கரைக் கானலில் அவளைப் பெண் எனக் கொண்டேன்; இல்லை; அவள் வருத்தும் தெய்வம் என்பதை இப்பொழுது அறிகின்றேன்”
“அவள் பெண் அல்ல; உயிர் உண்ணும் கூற்றுவன் ஆகின்றாள்”