ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு நாவல்தான்’ என்று சாதாரணமாக சொல்வதை எல்லோரும் கேட்டிருக்கலாம். அதாவது ஒருத்தர் தான் வாழ்ந்த வாழ்க்கையை எழுதிவிட்டால் அதுவே நாவலாகி விடும் என்கிற பொருளில். ஆனால் இந்தக் கூற்றில் மற்றொரு அர்த்தமும் வெளிப்படுவதாக எனக்குப் படுகிறது. அதாவது ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு புனைவுதான் என்று சொல்வதாகப் படுகிறது. எப்படியென்றால் நம் வாழ்க்கையை வடிவமைப்பது நாமல்ல. வாழ்க்கை குறித்து ஏற்கெனவே உற்பத்தி செய்து காப்பாற்றுப்பட்டு வருகின்ற கருத்தாக்கப் புனைவுகளின் வழிதான் நாமும் வாழ்ந்துவிட்டுப் போய்ச் சேர்கிறோம். எல்லாவற்றையும் நாம்தான் தேர்ந்தெடுக்கிறோமென்று நினைத்து இயங்குகிறோம். ஆனால் தேர்ந்தெடுத்தலின் விதிமுறைகள் நம் கைக்குள் அடங்குவதாக இல்லை. அது நமக்கு வெளியே தன்னிச்சையான ஓர் இயக்கம் கொண்டிருப்பதாகப் படுகிறது. அந்தத் தன்னிசையான வெளி என்பது நம்முடைய மரபணுக்கள், மொழி, பண்பாடு, மதம், கலை இலக்கியம், நாம் வாழும் காலம் முதலியவற்றின் கூட்டுக் கலவையில் உருவாகி இயங்குவதாகத் தோன்றுகிறது. சிவகாமியின் ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ என்று சுயவரலாற்று நாவல் என்று கூறப்படுகின்ற ஒரு பாணியில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலை வாசித்து முடித்த போது, எனக்கு இப்படித்தான் தோன்றியது. தன்காலச் சமூக நிகழ்வுகள் எனும் பேரியாற்று வெள்ளத்தில் விழுந்த ஒரு மிதவையாக நீலா அய்யேயெஸ் இழுத்துச் செல்லப்படுகிறார்;