ஆயிரத்தொரு இரவுகள் (One Thousand and One Nights அரபி: كتاب ألف ليلة وليلة) என்பது மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள் பண்டைய அரேபியா, யேமன், பண்டைக்கால இந்திய இலக்கியங்கள்[1], பாரசீக இலக்கியங்கள், பழங்கால எகிப்திய இலக்கியங்கள், மெசொப்பொத்தேமியத் தொன்மங்கள், பண்டைச் சிரியா, சின்ன ஆசியா, கலீபாக்கள் காலத்து மத்தியகால அராபிய நாட்டார் கதைகள் என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இசுலாமிய பொற்கால நேரத்தில் அரபு மொழியில் தொகுக்கப்பட்டன. இந்நூலின் எல்லாப் பதிப்புக்களிலும் உள்ள பொதுவான அம்சம், அரசர் சாரியார் மற்றும் அவர் மனைவி செகர்சதாவினதுமான முதன்மைக் கதையாகும். ஏனைய கதைகள் இம் முதன்மைக் கதையில் இருந்தே நகர்கின்றன. சில கதைகள் தனிக் கதைகளாகவும் வேறு சில கதைகள் பிற கதைகளில் கதைக்குள் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. சில பதிப்புக்கள் 1001 இரவுகளை உள்ளடக்கியிருந்தாலும் வேறு சில பதிப்புக்களில் சில நூறு இரவுகள் மட்டுமே காணப்படுகின்றன