ஒரு நாட்டின் இலக்கிய வரலாற்றை அந்நாட்டில் உள்ள மொழிகளில் படைக்கப்படும் படைப்புகளை வைத்து வரையறுத்துவிடமுடியும். ஆனால் இந்தியா போன்ற பிறநாடுகளில் எழுதப்படும் ஆங்கில படைப்புகளை வரையறுப்பதில் தொடக்கக் காலத்தில் குழப்பம் இருந்தது. இதை நிவர்த்தி செய்யும் விதமாக, இந்திய ஆங்கில இலக்கியத்தை பிறப்பால், குடியுரிமையால் பரம்பரை பரம்பரையாக இந்தியாவில் வாழ்ந்து வந்த எழுத்தாளர்களின் படைப்பு என்று நூலாசிரியர் வரையறுக்கிறார். இரண்டாம் பாகத்தில், இந்தியாவுடனான பிரிட்டனின் தொடர்பு குறித்த வரலாறு தொடங்கி 1757ஆம் ஆண்டு பிளாசி யுத்ததிற்குப் பிறகு, கிழக்கு இந்தியக் கம்பெனி வங்காளத்தின் உரிமை பெற்றது. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷாரின் ஆட்சி இந்திய ஆங்கில இலக்கியத்தின் உதயம் என்று விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தால் மேலை நாட்டுக் கருத்துகளின் தாக்கத்தினால் ஐரோப்பியக் கல்வியை ஆழமாகக் கற்கும் வாய்புக் கிடைக்கப்பெற்றது. அதைத் தொடர்ந்து, மெக்காலே கல்வி திட்டம் அறிமுகம் என நீண்ட வரலாற்றை இந்நூல் பதிவு செய்துள்ளது. இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றைக் கூறும் இந்நூல், இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆங்கில இலக்கிய வரலாறு பயிலும் மாணவர்களுக்கும் அரிய பல தகவல்களை அளிக்கிறது. நன்றி: தினமணி, 1/7/2013.