இளமையில் சுதந்திரப் போராட்டக்களத்திலும், அதைத் தொடர்ந்து இலக்கியத்தளத்திலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் சி.சு.செல்லப்பா. காந்தி யுக அர்ப்பணிப்பு மனோபாவமே அவருடைய வாழ்வை வழிநடத்திய சக்தி. காந்தியமும் இலக்கியமுமே அவருடைய வாழ்வின் லட்சியப் பிடிமானங்களாகக் கடைசி வரை இருந்தன. வேள்வித் தீயென வாழ்வை அமைத்துக்கொண்டவர் சி.சு.செல்லப்பா.
1912 செப்டம்பர் 29-ல் வத்தலக்குண்டில் செல்லப்பா பிறந்தார். தந்தை அரசு அதிகாரி. தந்தையின் பணியிட மாற்றலுக்கேற்ப பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல், ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்புகளை முடித்தார். மதுரைக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார். ஆங்கிலேய அரசு அதிகாரியான தந்தை ஒரு தேசியவாதி. தந்தையிடமிருந்து தேசிய ஊக்கம் பெற்ற இவர் சிறு வயதிலேயே ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் தேசியப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அப்போது நூறு தேசியப் பாடல்களுக்கு மேல் மனப்பாடம் செய்துவைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். வீட்டில் ராட்டையில் நூல் நூற்றிருக்கிறார். சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறையும் சென்றிருக்கிறார்.