''எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி !''
என்று ,பூவனம் கிராமத்தின் முதல் தெருவில், தன் ஒற்றை மாடி வீடான தங்கம் இல்லத்தின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து, திருநீறணிந்த நெற்றியுடன் உரத்த குரலில் சிவனைப் போற்றித் துதித்துக் கொண்டிருந்தார் திருஞானம். வயது அறுபத்தேழு, வயலில் உழைத்து, உழைத்து வஜ்ரம் பாய்ந்த உடம்பாக இருந்ததால், பார்த்தால் யாரும் அறுபதைக் கடந்தவர் என்று சொல்ல மாட்டார்கள். தலையிலும் ஒரு முடிகூட நரைக்கவில்லை, திருஞானத்தின் வீட்டில் கீழை ஒரு பெரிய கூடம், ஒரு சமையலறை, ஒரு சாமி அறை மற்றும் இரு படுக்கை அறைகளும், மேலே மாடியில் ஒரு அறையும் உள்ள வசதியான வீடுதான் அதன் ஒவ்வொரு செங்கல்லும் திருஞானத்தின் கடுமையான உழைப்பைத் துதி பாடும். வயல் காட்டில் ஓயாமல் உழைத்துச் சேமித்துக் கட்டிய வீடு அது.