பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் - - தோற்றுவாய் - - எழுதப்படுவதை எழுத்து என்று கூறுவார்கள். எழுதப்படுவதால் அஃது எழுத்து என்னும் பெயரைப் பெற்றது என்பர். எழுத்து என்பது ஒலி வடிவம், வரிவடிவம் என்னும் இருவகை வடிவங்களைக் கொண்டது. வரிவடிவத்திலே எழுத்துப் புலப்படும் தன்மையது. ஒலி ஆனால், ஓசையளவால் புலப்படுமேயன்றி, அதன் வடிவம் கண்ணுக்குப் புலனாவதின்று. எனவே, வரி வடிவத்தினையே எழுத்தெனப் பெரிதும் குறித்தனர். எழுதப்படுவதால் 'எழுத்து' எனப் பெயரும் குறித்தனர். எழுத்தின் தத்துவ விளக்கம்: எழுத்து என்பது எழுதப்படுகின்ற வரிவடிவத்தைக் குறிப்பதேயாயினும், அஃது ஒருவர் எழுத்துக்களால் உணர்த்துகின்ற செய்திகள் அனைத்தையும் குறிக்கும் ஒரு பொதுப் பெயர்ச் சொல் எனவும் கொள்ளலாகும்.