தமிழ் நாட்டில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து 19-ஆம் நூற்றாண்டு வரை
மக்களிடையே மிகச் சிறப்புடன் இருந்த ஒரு வகைக் கூத்துக்கலை இலக்கியமே பள்ளு
ஆகும். 96 வகை பிரபந்தங்களுள் பள்ளும் ஒருவகை என்று சிற்றிலக்கிய
ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். பள்ளு என்பது பள்ளர்கள் எனப்படும் ஒரு சாதி
மக்களின் வாழ்வியல் முறைகளைக் கதைப் போக்கில் விளக்கிக் கூறும் நாடக
இலக்கியம். பள்ளு இலக்கியத்தின் மூலம் உழவர்களின் பழக்க வழக்கங்கள்,
ஒழுகலாறுகள், வேளாண்மைச் செயல் முறைகள், பள்ளர்களிடையே வழங்கும் சமூகப்
பழக்க வழக்கங்கள், மரபுகள், சடங்குகள், குடும்ப வாழ்வியல் முறைகள் முதலான
பல்வேறு செய்திகளை அறிய முடிகின்றது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓரளவு பாடுபொருள் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அரசன் இறைவன் ஆகியோரைத் தலைமக்களாகக் கொண்டு இலக்கியங்கள் பாடப்பெற்றன.
பள்ளு இலக்கியம் சமூக அடிமட்ட மக்களைத் தலைவர்களாக மாற்றியது.
3.1 பள்ளு இலக்கியத்தின் தோற்றம்
சிற்றிலக்கியங்களுள் பள்ளும், குறவஞ்சியும் தனிச்சிறப்புடையன. தனிச்
சிறப்பாவது, எளிய மக்களின் வாழ்வியலைக் காட்டுவது. இதற்கு முன்பு
சிற்றிலக்கியங்களில் தெய்வம் அல்லது மன்னன் இடம் பெற்றதை நினைவு கூர்தல்
நன்று. சிற்றிலக்கியம் மக்கள் இலக்கியமாக மாறியது பள்ளு, குறவஞ்சி போன்ற
இலக்கியங்களில்தாம். அதனால் இவற்றுக்குத் தனிச் சிறப்புண்டு.
பள்ளு என்றால் என்ன?
'பள்' என்ற சொல் உகர விகுதி பெற்று பள்ளு என்று ஆகி உள்ளது. பல்லு, கள்ளு, முள்ளு என்ற வழக்காறுகளை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.
உழவுத் தொழிலுக்குச் சிறந்த இடம் மருதம். இது பயிர்த்தொழில்
செய்வதற்குத் தக்கவாறு தண்ணீர் தங்கும் பள்ளமான இடங்களை உடையது. பள்ளங்கள்
நிறைந்த இடத்தில் வேலை செய்வோரைப் பள்ளர் என்று குறிப்பிட்டனர். பள்ளர்கள்
பாடும் பாடலே பள்ளு என்று கூறுவர்.