உபநிஷதம் என்றால் உண்மை அறிவு என்றே கொள்ள வேண்டும். சுக துக்கங்களின் பற்றில் இருந்து விடுபடல் முக்தி. இந்த முக்தி நிலை பெறுதல், உண்மை அறிவாலே கைகூடும். அந்த உண்மை அறிவு பிரம வித்யை எனப்படும். இவை நம் பாரம்பரிய அறிவுக் களஞ்சியமாகிய நான்கு வேதங்களிலும் உள்ள உபநிஷதங்களின் பால் காணக் கிடைக்கும். இந்த நூலில், ஸ்ரீசங்கர பாஷ்யத்தின் சாராம்சங்கள் அடங்கியது என்றும், நாகை வழக்கறிஞர் என்.பி.சுப்ரமணிய சர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டு, மகாகவி சுப்ரமணிய பாரதியாரால் பார்வையிடப்பட்டு, புதுவை நா.சு. ராஜாராம சர்மாவால் வெளியிடப்பட்டதன் நடைப் பதிப்பு என்றும் முகப்பிலேயே தரப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அரிதின் முயன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதனை இந்நூலாசிரியர் ஒப்புநோக்கித் தொகுத்துள்ளார். இந்த நூலில், நான்கு வேதங்களிலும் இடம்பெற்றுள்ள உபநிஷங்கள் பன்னிரண்டு தொகுக்கப்பட்டுள்ளன. ருக் வேதத்தில் இருந்து ஐதரேய, யஜூரில் இருந்து தைத்திரிய, கட, சுவேதாஸ்வதர, ஈச, பிருகதாரண்யக உபநிடதங்கள், சாம வேதத்தில் இருந்து கேன, சாந்தோக்ய உபநிடதங்கள், அதர்வண வேதத்தில் இருந்து நரசிம்மதாபனீ, பிரச்ன, முண்டக, மாண்டூக்ய உபநிடதங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உபநிடதங்களுக்கு ஸ்ரீசங்கர பகவத் பாதர், அத்வைத சித்தாந்தத்தை ஒட்டி நல்கிய பாஷ்யத்தைத் தழுவி விளக்கவுரை தரப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில், உபநிடதங்களின் மூலம் இல்லாமல், தமிழ் மொழிபெயர்ப்பு மட்டுமே தரப்பட்டுள்ளதால், தடையின்றி தொடர்ந்து வாசித்து, தத்துவார்த்த ரீதியாக அனுபவிக்க முடிகிறது. ஒவ்வோர் உபநிடதங்களும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு கண்டத்துக்கான எண் தரப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால், மூலத்தை ஒப்பு நோக்க வசதியாகவும் உள்ளது. ஞானம் விழையும் மக்களுக்கு நல்லதோர் தொகுப்பு.