வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; சட்டம் இயற்றி; சமூக சிந்தனையில் ஆழ்ந்து; விஞ்ஞானம், கணிதம், இலக்கியம், வான சாத்திரம் என்று விரிந்து... ஆழ்ந்து, அகன்ற இந்த சமுத்திரத்தை அதன் கரையோரத்தில் நின்று பார்த்தவருக்கு ஏற்பட்ட பிரமிப்பை, அவர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிற முயற்சி இது. எல்லா மதத்தவர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம். சமயப் பிரதிநிதிகளின் தன்மையைப் பொறுத்தே சமய வளர்ச்சியும் நலிவும் ஏற்படுகின்றன. புத்தருக்குப் பிறகு ஆதி சங்கரர் பரம உத்தமமான மனிதராக வந்தார் என்றால், ஜனங்கள் அவரிம் திரும்புகிறார்கள். அப்புறம் ராமானுஜர், மத்வர் என்று இப்படி தங்கள் சொந்த வாழ்க்கையில் உயர்ந்தவர்களாக விளங்கியவர்கள் வந்தபோது, அந்தத் தனி மனிதரிடம் ஜனங்களுக்கு உண்டான பிடிப்புக் காரணமாக, அவரது சித்தாந்தம் பரவியது. ஏராளமான மக்கள் தாங்கள் பிறந்த மதத்தில் எத்தனை தாழ்த்தி வைக்கப்பட்டதாகத் தோன்றினாலும் பரவாயில்லை என்று நினைத்து, தங்களுக்கு இன்னொரு மதத்தால் கிடைக்கிற வசதிகளையெல்லாம் துச்சமாக நினைத்து, அதற்குப் போகாமல்தானே இருந்திருக்கிறார்கள்! இதற்கு முக்கிய காரணம், அவர்களுடைய பண்பு மட்டும் அல்ல; நம் மதத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் பரம உத்தமமான மகான்கள் தோன்றிக் கொண்டு வந்திருப்பதுதான்! இப்படிப்பட்டவர்களுடைய குண விசேஷத்தாலேயே அவர்களைத் தேடி வருகிறவர்களின் தோஷங்களும் போய்விட வேண்டும். இப்படிப்பட்டவர்களை உண்டு பண்ணுவதே இப்போதும் நம் மதம் தழைக்க வழி. எதிர்ப் பிரசாரம் எதுவுமே வேண்டாம். மதநெறிகளை உயிரோடு வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிற பிரதிநிதிகள்தான் வேண்டும். இவர்களால்தான் இதுவரை யுக யுகாந்தரமாக நம் மதம் உயிரோடிருந்து வந்திருக்கிறது. இனிமேலும் இப்படிப்பட்டவர்களால்தான் அது உயிர் வாழ வேண்டும்.