அசோகமித்திரனின் பெரும்பாலான கதைகளும் 'கரைந்த நிழல்கள்', 'தண்ணீர்', மற்றும் 'விடுதலை' போன்ற நாவல்களும் சென்னையையே மையமாகக் கொண்டவை. ஆனால் அவரது சிறந்த நாவலாகச் சொல்லப்படும் '18வது அட்சக்கோடு' நாவல், அவரது பால்ய கால வாழ்வின் நினைவுகளாய் இன்னும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிற செகந்தராபாத் நகரத்தை முழுதும் களமாகக் கொண்டது. இந்தியப் பிரிவினை சார்ந்த வரலாற்றுப் பூர்வமான இலக்கியப் பதிவு அது. அந்நகரம் வன்முறையில் சிக்கி எப்படி அவதிப்பட்டது என்பதை அசோகமித்திரன் அற்புதமாக இந்நாவலில் சித்தரித்திருக்கிறார்.