பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் [1] நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட இந்தியாவின் மாகாணங்கள் பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது. 1876 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.
ஆளும் முறை 1858 ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.) இவ்வாட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது. மேலும் இது இந்தியா என்ற பெயரில் உறுப்பு நாடுகளுள் ஒன்றாக 1900, 1920, 1928, 1932 மற்றும் 1936 ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக்ஸிலும் 1945 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகவும் இணைந்தது.