இன்றைய உலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும், கிளப், பார் போன்ற கேளிக்கைகளும், வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகங்களும் பொழுதுபோக்கு அம்சங்களாக வளர்ந்துள்ளன. என்னதான் ஊடகங்கள் இருந்தாலும் படிப்பதில் கிடைக்கும் சுகம், சுவை, ஆனந்தம், பரவசம் அலாதியானது; தனித்துவமானது. இந்தப் பரவசம், நாவலைப் படைப்பதிலும் கிடைக்கும். நாவல் எழுதுவது ஒரு தவம் என்றால், அதைப் படிப்பது தவத்தால் பெற்ற பயன். எழுத்து வீச்சில் வல்லவரான கொத்தமங்கலம் சுப்பு செய்த தவமே பந்தநல்லூர் பாமா! இந்த நாவலில், நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த தமிழ்நாட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியை, தன் எழுத்தால் அழகுற படம் பிடித்து, ஒரு திரைப்படம் போல விரித்துக் காட்டியுள்ளார். பரதக்கலையை உயிர் மூச்சாகக் கொண்ட பாமாவின் உணர்ச்சிப் போராட்டமே இந்த நாவல். பாமாவின் இளமை அழகையும், மயங்க வைக்கும் சாரீரத்தையும், பரதத்தையும் பார்த்து நாடே போற்றுவதையும், அவளைத் திருமணம் செய்துகொள்ளாமல் ஆசை நாயகியாக வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறவர்களையும் தனக்கே உரிய எழுத்து நடையில் நளினமாகக் கையாண்டிருப்பதைப் படிக்கப் படிக்க, பரவசத்தைத் தூண்டுகிறது. நாவலில் வரும் ராஜபார்ட்டு கமலக்கண்ணன், நகைச்சுவை நடிகன் முத்து, சிங்காரச் சிட்டு, சம்திங் சாமா முதலிய பாத்திரப் படைப்புகள் உயிரோட்டமாக நம் கண் முன்னே நிழலாடுகின்றன. கிராமச் சூழலோடும், நகைச்சுவை உரையாடலோடும், யதார்த்தமான வாழ்வை உருக்கமாகச் சொல்லியிருப்பது மனதில் ஆழப் பதிந்துவிடுகிறது.