தமிழர்களின் அடையாளங்களில் மிக முக்கியமானவை வீரமும் காதலும்தான். தமிழின் முதல் இலக்கியமாகக் கருதப்படும் சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்களின் கருப்பொருளே இந்த இரண்டு அம்சங்கள்தான். வீரம் செறிந்த பாடல்களை புறம் என்றும், காதல் கசியும் பாடல்களை அகம் என்றும் பிரித்தனர். கொல்லுகின்ற காளையின் கொம்புகளுக்கு அஞ்சும் ஆண்மகனை மறுபிறவியிலும் விரும்பமாட்டார்கள் பெண்கள் என்று கூறுகிறது சங்க இலக்கியம். சங்க இலக்கியத்தின் தாக்கம் இன்றைய நவீன இலக்கியங்களில் பிரதிபலிப்பதைத் தவிர்க்க முடியாது. இந்த வரிசையில், பல வருடங்களுக்கு முன்பு கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இந்நாவலையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். வீரம் உள்ள ஒருவரால்தான் நேர்மையாக வாழ முடியும் என்பதற்கு இந்நாவலின் நாயகன் நல்ல உதாரணம். காதலித்து மணந்த கணவன் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் அவனுடன் வாழ்வதையே தன் வாழ்வின் பெருமையாகக் கருதுபவள் இந்நாவலின் நாயகி. தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் கொத்தமங்கலம் சுப்பும் ஒருவர். இவர் எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலுக்கு இணையான சிறந்த நாவலாக இந்நாவலைக் கருதலாம். மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை, அவர்களின் நம்பிக்கையை அவ்வளவு அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் தன்னுடைய சுயத்தை மட்டும் இழந்துவிடக் கூடாது என்ற நம்பிக்கையை இந்நாவல் உங்களுக்கு ஏற்படுத்தும்.