எனது கட்டுரை நூல்களின் வரிசையில் பத்தாவது இது. 'பையத் தின்றால் பனையும்
தின்னலாம்' என்று நம் மூதாதையர்கள் அறியாமலா சொன்னார்கள்! பனை எனில் பனை
மரம் என்று மட்டும் பொருள் அல்ல. ஒரு பேரளவு, என்றும் பொருள் தருவது. தொல்
காப்பியம், எழுத்ததிகாரம், 169-வது நூற்பா. பனையில் எதிர்ப்பதம் தினை
என்றும் அறிக. எனவே 2012-2013ல் எழுதிய கட்டுரைகளும், முன்னுரைகளுமாக
இத்தொகுப்பு உங்கள் பார்வைக்கு வருகிறது. சம்பிரதாயமான முன்னுரைகளை நான்
எழுதுவதில்லை. பிறிதொரு படைப்பாளியின் நூலை மையப்படுத்தும் கட்டுரையாகவே
அது இருக்கும். இளைய படைப்பாளிகள் என்பதால் சிறப்புக்களை மட்டுமே
சிலாகித்துப் போகிறேன். மேலும் முன்னுரைகளுக்குள் வஞ்சனைப் பூரணம் வைக்கும்
வகையும் அறியேன்.