சம்சார சாகரத்தின் சங்கடங்களை ஏற்க விரும்பாது வீட்டை விட்டு சந்நியாசம் மேற்கொள்ள ஓடி, பின்னர் அது சரிப்பட்டு வராமல் திரும்பி வந்து சாய்வு நாற்காலியே கதியாக சௌகர்யமாக வாழும் ஊதாரித் தந்தை.-- கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் தன் இரு மகள்களின் சௌகர்யமான வாழ்விற்காக மகன்களின் இரத்தத்தை உறிஞ்சும் தாய். -- கணவன் வீட்டுக்குக் காசு சேர்ப்பதிலேயே கண்ணாக இருக்கும் இரு தங்கையர்கள்— அவர்கள் அனைவரும் சேர்ந்து அழுத்தப் பார்க்கும் மீள முடியாத புதைமணலிலிருந்து தன் புத்திசாலித்தனத்தால் மீண்டு தனியே சென்று விடுகிறான் அண்ணன் மித்திரன்.' ஆனால் தம்பி சந்திரனோ அப்புதைமணலில் சிக்கி மீளமுடியாமல் தன் அருமைக் காதலி டாக்டர் ரஞ்சிதாவைக் கைவிட்டு விடுவதோடு மட்டுமல்லாமல், பெற்றோரின் பண ஆசையால் நோயாளி மனைவியையும் கடைசியில் காலனுக்குப் பலி கொடுக்கிறான். இத்தகைய உணர்ச்சி மிக்க பாத்திரப் படைப்புகளடங்கிய நாவலை வெளியிட எங்களுக்கு அனுமதி அளித்த டாக்டர் கே. மகேஸ்வரன் அவர்களுக்கு எங்கள் நன்றி என்றென்றும் உரியதாகும்.