பொறுமைக்கு பூமியையும், சகிப்புத் தன்மைக்கு கங்கையையும் உதாரணமாகச் சொல்வார்கள். இந்த நாவலில் வரும் கதாநாயகி கங்கா பொறுமையில் பூமியையும், சகிப்புத் தன்மையில் கங்கையையும் ஒத்தே விளங்குகிறாள். ஆழமான அர்த்தத்தோடுதான் அவளுக்கு கங்கா என்று பெயர் சூட்டியிருக்கிறார் ஆசிரியை. பம்பாயிலிருந்து மெயில் வண்டியில் புறப்படுகிறான் கதாநாயகன் நரேந்திரன். கதையும் அதே மெயில் வேகத்திலேயே ஓடுகிறது. அவன் நம்பி வந்த ரத்னசாமி வைரப்பிள்ளையார் விஷயத்தில் அவனை ஏமாற்றினாலும் கூட, எந்த வைரத்திற்கும், வேறு எந்த விலை மதிக்க முடியாத பொருளுக்கும் இல்லாத பெருமையுடைய கங்காவின் அன்பை அவன் அடைய அவர் காரணமாகிவிடுகிறார். தான் ஏமாற்றப்பட்டுவிட்ட ஆத்திரத்தில் கொதிக்கும் நரேந்திரன் பழி வாங்கத் துடிக்கிறான். மாதா பிதா செய்த பாவம் மக்கள் தலையில் என்பது போல ரத்னசாமி செய்த குற்றத்திற்கு கங்கா தண்டனையடைய நேர்கிறது. அவளை ஒதுக்கி வைத்தது மட்டுமல்ல; எந்தப் பெண்ணாலுமே சகிக்கவோ மன்னிக்கவோ இயலாதபடி அவளது கற்பிற்கே களங்கம் கற்பிக்கிறான்.