அபௌருஷேயம் (மனிதர் செய்யாதது) என்றால், நம்ப மாட்டோம் என்பது சரியேயில்லை. நம் தேசத்தில் மட்டுமில்லாமல் மற்ற மதஸ்தர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள். கர்த்தரின் வார்த்தையையே தாம் சொல்வதாகவும், தாமாக எதையும் சொல்லவில்லை என்றும் இயேசு சொல்கிறார். முகமது நபி அல்லாவின் ஆக்ஞைகளையே வெளியிட்டதாக அந்த மதஸ்தர்கள் சொல்கிறார்கள். நாம் அபௌருஷேயம் என்பதைத்தான் அங்கே Revealed Text என்கிறார்கள். தெய்வவாக்கே மஹான்கள் மூலம் மத நூல்களாக வந்திருக்கின்றன.