மனத்தத்துவ சாஸ்திரத்திலே எனக்குத் தனிப்பட்ட விருப்பம் உண்டு.
அதிலும் குழந்தை உள்ளத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்குப் பேராவல்.
அதனால் பலதிறப்பட்ட கோட்பாடுகளையுடைய உள்ள ஆராய்ச்சிப் பண்டிதர்கள் எழுதிய
நூல்களைப் படிக்கலானேன். குழந்தைகளையும் சிறுவர்களையும் அருகிலிருந்தே
கவனிக்கும்படியான வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. படிப்பின் பயனாகவும்
சொந்த ஆராய்ச்சியின் முடிபாகவும் எழுதி வைத்த குறிப்புக்களின் தொகுப்பே
இந்த நூலுக்குக் காரணமாயிற்று.
அனைவரும் எளிதில் படித்து உணர்ந்து கொள்ளும் முறையில்
குழந்தை உள்ளத்தைப் பற்றி எழுத வேண்டும் என்பது எனது கருத்து. சாஸ்திர
ரீதியிலே பாடபுத்தகம் போல எழுதுவதைவிடப் படிப்பதற்குச் சுவை தரும் வகையில்
கட்டுரைபோல எழுதவேண்டுமென்று நான் முயன்றிருக்கிறேன்.