தமிழக வரலாற்றுப் பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தொல்லியல் சான்றுகளாக, இலக்கியப் பதிவுகளாக, இலக்கண விதிகளாக, வாழ்வியல் தத்துவங்களாகவே இன்று நம்மிடம் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் மேற்கொண்டுவரும் அகழாய்வுகள் மூலம் இதுவரை சொல்லப்பட்டு வந்த தொன்மைக்கும் மேலாகத் தமிழக வரலாறு. தொடங்குவதைக் கண்டறியமுடிகின்றது. அக்காலத்துத் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களும் வரலாற்றுத் தடயங்களும் தொன்மைத் தமிழக வரலாற்றை இன்னும் முன்னே இட்டுச் செல்கின்றன. இவற்றால், தமிழக வரலாற்றை முழுமையாக எழுதுவதற்கான தரவுகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. இவற்றுக்கு மேலாகக் கடல் கடந்து சென்று தம் வரலாற்றைப் பதிவுசெய்த தொல் தமிழர்களையும் இத்தருணத்தில் நாம் கருத்தில் கொண்டு, தமிழக வரலாற்றை முழுமையாக எழுத வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும் என்ற தலைப்பில் 1972ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்கு நூல் எழுதிய வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கே.கே.பிள்ளை கீழ்வருமாறு குறித்துள்ளதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டையும் அறிந்துகொள்வதற்குச் சங்க இலக்கியம் நமக்குப் பெரிதும் பயன்படுகின்றது. சங்க காலத் தமிழர் பண்பாடுகளே தமிழரின் வரலாறு முழுவதிலும் தொடர்ந்து வந்து அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அடிகோலி வந்துள்ளன. எனவே, அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியானது இந்நூலில் சற்று விரிவாகவே மேற்கொள்ளப் பட்டுள்ளது. (நூன்முகம்) தமிழக வரலாற்றுக்கான அடிப்படைத் தரவுகளை ஒருங்கே திரட்டி, வரலாற்றுக்கு முந்தைய தமிழகம், அகழாய்வுகள் மூலம் கிடைத்த வரலாற்றுச் சான்றுகள், சங்ககாலத்திய வரலாறு.