book

நன்மாறன் கோட்டைக் கதை

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இமையம்
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :211
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789382394372
Add to Cart

நன்மாறன்  கோட்டை கதை - இமையம்
"நல்ல ஊரு சார். இங்க வேல செய்றவங்க எல்லாருமே நல்ல மாதிரியான ஆளுங்கதான். நல்லா கோஆப்ரேட் பண்ணுவாங்க. கட்சிக்காரங்க, அரசியல்வாதி, உள்ளூர்க்காரங்கன்னு யாரும் ஸ்கூலுக்குள்ளார வர மாட்டாங்க. நான் இந்த ஸ்கூலுக்கு வந்து பத்து வருசமாச்சி. எந்தத் தொந்தரவும் இல்ல. நீங்களும் ரிட்டயர் ஆவுவரைக்கும் இந்த ஊர்லியே ஓட்டலாம் சார். நன்மாறன்கோட்டங்கிற பேருக்கேத்த மாதிரிதான் ஊரு ஆளுங்களும் இருப்பாங்க." என்று உடற்கல்வி ஆசிரியர் தனவேல் சொன்னார்.
"அப்படியா?" என்று ராமநாதன் கேட்டதோடு சரி.
                மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இன்று காலைதான் கடலூர் மாவட்டத்திலிருந்து வந்து புதிய பள்ளிக்கூடத்தில் ராமநாதன் சேர்ந்திருக்கிறார். முதல் நாளே அதிகம் பேச வேண்டாம். கேள்விகள் கேட்க வேண்டாம். ஆசிரியர்கள் எப்படியோ, ஊர் எப்படியோ என்ற யோசனையில் அதிகமாகப் பேசாமல் இருந்தார்.
                காலையில் வந்ததிலிருந்து ராமநாதனுக்கு ஒரே வேலையாக இருந்தது. வரிசையாக வந்து ஆசிரியர்கள் வாழ்த்து சொன்னார்கள். பணியேற்ற விபரத்தை உரிய அலுவலர்களுக்குத் தெரிவிப்பதற்கான கடிதங்களைத் தயார்செய்தார். மதியம் சாப்பிட்டார். உட்கார்ந்தே இருந்ததால் தூக்கம் வருவது மாதிரி இருந்தது. முதல் நாளே தூங்கினால் அசிங்கம் என்று நினைத்தார். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இரண்டே கால்.
"ஒவ்வொரு வகுப்பா பாத்திட்டு வரலாமா சார்?" என்று கேட்டார். எதிரில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த தனவேல் மறுப்பு எதுவும் சொல்லாமல் "போகலாம் சார்" என்று சொல்லிவிட்டு, போவதற்கு தயாரான மாதிரி எழுந்து நின்றார். ராமநாதன் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தார். அவருக்குப் பின்னாலேயே தனவேலுவும் வந்தார்.
"மொதல்ல ஆறாம் வகுப்பு பாத்திடலாம். எங்க இருக்கு?"
"வாங்க சார்" என்று சொன்ன தனவேல் ராமநாதனுக்கு முன்னால் வராண்டாவில் நடக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் ராமநாதன் நடந்தார்.