"சர்வதேச சமூகம் தனது நீண்ட, நெடிய பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள், தற்போது சந்தித்து வரும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்னைகளை ஆழமாக அலசி ஆராய்ந்துள்ள நூலாசிரியர், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காண அறிஞர்கள் இதுவரை வகுத்தளித்துள்ள கோட்பாடுகளும், கொள்கைகளும் போதுமானவையாக இல்லை என்பதைத் துணிவுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
காந்தியைப் பற்றியும், காந்தியத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள, தேடித் தேடி படித்த எத்தனையோ புத்தகங்களில் இல்லாத அரிய தகவல்களை நூலாசிரியர் தொகுத்தளித்துள்ளார். இதன்மூலம், காந்தி, காந்தியத்தின் பன்முகப் பரிமாணத்தை நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. குழப்பமான அரசியல், சமூகச் சூழலில் சர்வதேச சமூகமே மாற்று அரசியல் குறித்து தீவிரமாகச் சிந்திக்கும் இந்தத் தருணத்தில், ""காந்தியம்' தவிர்க்க முடியாததாக உள்ளது என்று நூலாசிரியர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
காந்தியைத் திருவுருவாக்கி அவரது சமூக, அரசியல், பொருளாதார, வாழ்நெறிகளை ஒரு பக்திச் சொல்லாடலாக மாற்றி குழப்பத்தை உருவாக்கியதால், காந்தியத்தின் மாற்று நெறிகள், பரிசோதனைகள், விவாதிக்கப்படாத, விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படாத, மூடுண்ட பெருஞ் சொல்லாடலாக வடிவமைக்கப்பட்டுவிட்டன என்று நூலாசிரியர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது காந்தியத்தின் மேன்மையை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார், அதன் மீது பற்று வைத்திருக்கிறார் என்பதை நமக்குக் காட்டுகிறது."