கண்டியை ஆண்ட மன்னர் பரம்பரையின் கதையை நூல்களில் வடித்து, அவர்களின் நினைவுகள் சாகாமல் இருக்க புராணகதைகள், வரலாற்று நூல்கள், நாடகங்கள், இலக்கிய புதினங்கள், கூத்துகள் என பல்வேறு கலை மற்றும் ஊடகங்களிலும் கூட கண்டிராசன் கதை சொல்லப்படாமல் இருந்ததில்லை. தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கிலேயரிடையே அம்மன்னனது ஆட்சியும், அவருடைய அர்பணிப்பும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது எனக் கூறலாம். கடைசி காலகட்டத்தில் மன்னன் கைதாகி கொழும்பில் 349 தினங்கள் சிறை வைக்கப்பட்டு பின்னர் வேலூர் சிறையில் 16 வருடங்கள் இருந்த போதிலும், அவர்மீதும் அவர் ஆட்சியின் மீதும் வீசப்பட்ட அநாகரிக வார்த்தைகளுக்காக மனம் நொறுங்கினாரேயொழிய தமக்களிக்கப்பட்ட தண்டனைக்காக அவர் ஒருபோதும் மனம் வருந்தியதாய் தெரியவில்லை.