தாகூரின் சமூகத் தத்துவத்தின் மையக் கருத்து ‘சமாஜ்’ அல்லது சமூகம். ‘சுதேசி சமாஜ்’ (1904) கட்டுரையில் இக்கருத்து முதன்முதலில் முழுமை யாக வரையப்பட்டது. துடிப்புடைய உயிராக, அதனுள்ளே வாழும் தனிநபர்களின் வாழ்வாதாரப் பண்பாட்டு, ஒழுக்க, ஆன்மிகத் தேவைகளை உறுதி செய்யும் அடிப்படைத் தேவையாக சுதேசியத்தைப் பார்த்தார்: மக்களின் நாகரிக வளர்ச்சியை முன் னெடுப்பதுதான் ‘சமாஜின்’ நோக்கம்; உயிருள்ள சமூகத்தை நிலைநிறுத்தி, வழி நடத்திச் செல்லும் பொறுப்பு வலுவான, தன்னம்பிக்கையுள்ள, பிறரைச் சார்ந்திராத தனி மனிதருக்குத் தான் உண்டு. அரசுக் கென்று தன்னுள்ளடங்கிய அதிகாரமெதுவும் கிடையாது; சமூகம் தந்துள்ள பொறுப்பைச் செயல்படுத்தும் புற அமைப்புதான் அரசு; அதன் அதிகாரமும், பொறுப்புகளும் மக்களிடமிருந்து பெறப்படுவன. சமூகத்தைக் கட்டுப்படுத்தும், சமூகத்திற்குத் தலைமையேற்கும் அமைப்பாக அரசு மாறுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அரசின் பணி, பாதுகாப்பு தருவது; வளர்ச்சிப் பணியும், உருவாக்கும் பொறுப்பும் சமூகத்திற்குரியவை. இந்திய நாகரிகமும், சிந்தனையும் கடந்த காலத்தில் இத்தகைய சமூக அமைப்பைத்தான் வளர்க்க முயற்சி செய்தன