"நீ எழுதியிருந்த கடைசிக் கவிதை நல்ல கருத்துள்ளதாக இருந்தது சாருமதி"
நான் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தேன். அவை வெளிர் பழுப்பு நிறமாக மாறி அமைதியாகவும், சிரிப்பதைப் போலவும் காணப்பட்டன. "நன்றி சங்கர்! நீ கவிதைகள் படிக்க விரும்புவாயென்று எனக்குத் தெரியாது" என்று இருதயம் படபடவென அடித்துக் கொண்டிருந்தாலும், மனதை அமைதிப்படுத்திக் கொண்டு கூறினேன்.
"நான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாகும் வார இதழ்களில் உன் கவிதைகளை ரசித்தப் படிப்பதுண்டு. உனது எண்ணங்களெல்லாம் உனது முகத்தைப் போல அழகாக இருக்கின்றன" என்று கூச்சத்துடன் கூறினான். "ஒரு கப் காப்பி சாப்பிடலாம் வருகிறாயா? சாருமதி" என்று அவன் நட்புக் கலந்த புன்சிரிப்புடன் அழைப்பது போலிருந்தது. "இன்று வேண்டாம் சங்கர். இன்னொரு சமயம் வைத்துக்கொள்ளலாம்" என்று ஒவ்வொரு சமயத்திலும் கூறி அவனிடமிருந்து தப்பிவிடுவேன். சங்கர் ஒரு நல்ல மனிதன். என்னுடைய அலுவலகத்தில் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறான். நான் அவனை மதிக்கிறேன். அதனால் தான் தூரத்தில் நான் வசிக்கும் சிறிய வீட்டுக்கு அவனை அழைக்க விரும்புவதில்லை.