முதல் பகுதியில் ஒருவர் தன்னை இந்துவாக கூறிக்கொள்வதில் உள்ள பிரச்சனை, வேதங்களின் உள்ளடக்கம், அவற்றின் நிலை பிற்காலத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டது, இந்துக் கடவுள்கள் ஒருவருடன் ஒருவர் சண்டைபோட்டுக் கொள்வதற்கான காரணம், வேதங்கள் அறநெறி, ஆன்மீகப் பண்பு கொண்டவையா போன்ற கேள்விகளை ஆராயும் எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது பகுதியில், பௌத்த சமயத்தின் வீழ்ச்சி பற்றியும், இந்து சமய இலக்கியங்களான பகவத் கீதை, வேதாந்த சூத்திரங்கள், மகாபாரதம், ராமாயணம், புராணங்கள் ஆகியவை குறித்தும் அம்பேத்கர் எழுதியவை இடம்பெற்றுள்ளன. மூன்றாவது பகுதியில் தீண்டாமை குறித்தும் அம்பேத்கர் ஆராய்ந்து எழுதிய எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.
தீண்டாமை குறித்த பகுதியில் இந்துக்கள் இடையே உள்ள தீண்டாமை, இந்து அல்லாதவர்களிடையே உள்ள தீண்டாமை, தீண்டப்படாதவர்கள் கிராமத்திற்கு வெளியில் வசிப்பது ஏன் என்பது குறித்தும், மாட்டிறைச்சியை உண்பது தீண்டாமைக்குக் காரணமா, அப்படியானால் இந்துக்கள் பசு இறைச்சியை சாப்பிடுவதை கைவிட்டு எவ்வளவு நாட்களுக்குப் பிறகு தீண்டாமை உருவானது என்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விடைகாண முயல்கிறார் அம்பேத்கர். கிட்டத்தட்ட கி.பி. 400வது ஆண்டுவாக்கில் தீண்டாமை சமூகத்தில் உருவாகி நிலைபெற்றிருக்கும் என்ற முடிவுக்கு வருகிறார் அம்பேத்கர்.
இந்திய அரசியல்சாசன நிர்ணய சபையின் தலைவராக இருந்த அம்பேத்கர் சட்டமேதையாக மட்டும் அறியப்படும் நிலையில், அவருடைய பன்முகத் தன்மையைச் சுட்டிக்காட்டும் வகையிலும் ஜாதி தொடர்பான தாக்குதல்களும் வேறுபாடுகளும் அதிகரித்திருக்கும் தற்போதைய சூழலில் அவருடைய எழுத்துகளின் தேவையை உணர்த்தும் வகையிலும் இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இந்து மதத்தை அம்பேத்காரின் பார்வையில் புரிந்துகொள்ள வைப்பது இந்தப் புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.