கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர். பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் கவிஞராக மட்டும் அடையாளம் காணப்படுபவரில்லை. மொழிபெயர்ப்பாளர், ஏட்டுச் சுவடிகளின் தொகுப்பாளர், ஆய்வாளர், நூலாசிரியர் என்று இவருடைய வேறு சில சிறப்புகளும் இவருக்கு உண்டு. இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் குறிப்பிட்ட எல்லைக்குள் முடங்கிக் கிடக்கவில்லை. இவரது கவிதைப் படைப்புகள் பரந்து விரிந்த கவிதை உலகில் பக்திப் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், வரலாற்றுப் பாடல்கள், வாழ்வியல் போராட்டப் பாடல்கள், சமூகப் பாடல்கள், தேசியப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள், கையறுநிலைப் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் மற்றும் பிற மொழியைத் தழுவி எழுதிய மொழிபெயர்ப்புப் பாடல்கள் என்று பல்வேறு வகைப்பாடுகளில் பல விழுதுகளைக் கொண்டு பன்னெடுங்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி வேரூன்றி இருக்கின்றன.
கவிமணியின் பாடல் சிறப்புக்கு அவரது பாடலில் அமைந்துள்ள எளிமையான சொல்லாடல், எளிமையாக விளக்கும் தன்மை, எவரும் அறிந்து கொள்ளும் அமைப்பு என இவரது பாடல்கள் அனைத்துமே அகராதி தேடாதவை. எக்காலத்திற்கும் ஏற்றவை. அவருடைய பாடல்களை நாம் முழுமையாக இங்கு ஆய்வு செய்யப் போவதில்லை. அந்தப் பாடல்களில் சில துளிகளை எடுத்துச் சுவைத்துப் பார்க்கப் போகிறோம். தேனின் சில துளிகள் நாக்கை இனிப்பாக்கி உடலைக் குளிர்ச்சியாக்கி விடும். கவிமணியின் சில பாடல்களைப் படித்தாலோ அல்லது கேட்டாலோ போதும், நமக்கு அதன் சுவை நம் மனதை நிறைவாக்கி விடும்.