புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவுதில் எங்களுக்கு என்றும் மகிழ்ச்சி. நல்லன கண்டெடுத்து நாட்டுக்குத் தந்து நாட்டு மக்களின் பாராட்டைப் பெறுவது தனிச் சிறப்புடையதுதானே! செல்வி மனோ ரம்யா இந்த வரிசையிலே ரொம்பவும் கொடுத்து வைத்தவர்தான். நல்ல சிந்தனை ஓட்டத்துடன் அற்புதமாக கதை எழுதியுள்ளார். நல்ல வளம் மிக்க கற்பனை. அன்றாட நிகழ்வுகளைச் சேர்த்து அற்புதமாக கதை புனைந்துள்ளார். படிப்பவர்களுக்குச் சுவையாகவும், மனதிற்கு இனிமையாகவும் இருக்கும் என்பது நிச்சயம். படித்து மகிழ்ந்து எழுதுங்கள். இவை தொடர்ந்து எழுத வழிவகுக்கும்.
'இப்ப முடிவா நீ என்னதாம்மா சொல்றே" பொறுமையை இழுத்து பிடித்த குரலில் கேட்டார் ராகவன். "அதான் சொன்னேனேப்பா இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும்ப்பா' உறுதியான குரலில் கூறினாள் நித்தியலஷ்மி. மேற்கொண்டு தந்தை ஏதோ பேசத் தொடங்குவதை கவனித்தவள், ''அப்பா ப்ளீஸ்ப்பா போதுமே, இப்பவே எனக்கு லேட், ப்ரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்கப்பா, கிளம்பட்டும்மா! பை டாட்..!" நித்தியாவின் குரல் தேய்ந்தது. மெல்ல ஹாலுக்குள் எட்டிப் பார்த்த அம்மா, அவர் முகத்தை பார்த்தவுடனே, “என்னங்க இன்னும் என்ன சொல்றா?" என கவலையுடன் கேட்டார்.