வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினால் தமிழில் சில புதிய இலக்கிய இலக்கண மரபுகள் உருவாயின. இதன் காரணமாக ஏற்பட்ட தேவைகளுக்கு இணங்கப் புதிய இலக்கண நூல்கள் தோன்றின. இவற்றுள் வீரசோழியமும் ஒன்று. புத்தமித்திரர் என்பார் இயற்றிய இந்நூலின் பெயர் வீர சோழன் என்னும் வீர ராசேந்திர சோழ மன்னனின் பெயரைத் தழுவியது எனக் கூறப்படுகிறது. இது தொல்காப்பியம் கூறும் பண்டைத் தமிழ் மரபுடன், சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும். புத்த மித்திரர் என்ற பதம் புத்தரின் நண்பர் என்ற கருத்துடையதகும். இந்நூலுக்குப் பாயிரம் இயற்றிய பெருந்தேவனார் புத்த சமயத்தை விதந்து எழுதியுள்ளமையால் அக்காலத்தில் புத்த சமயத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்வதற்காக அன்றேல் சமஸ்கிருத மொழி வழியாகத் தமிழை வடமொழிப் பரிச்சியம் உள்ளவர்களுக்கு கற்பிப்பதற்காக இந்நூல் எழுதபட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு என கனடாவிலுள்ள பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் தொல்காப்பிய மாநாடு ஒன்றில் கருத்துத் தெரிவித்தார். வீர ராசேந்திர சோழனின் நிதியுதவியில் இதனைப் புத்தமித்திரர் யாத்திருக்கலாம் எனவே வீரசோழியம் எனப் பெயர் பெற்றது என்று கருத இடமுண்டு.