பாரதி, திரு.வி.க. இருவரின் எழுத்துக்களிலும் கொதிப்புணர்வு அடங்கியிருக்கும் என்று எழுத்துலகம் கூறும். அந்தக் கொதிப்புணர்வு மரணப்படுக்கையில் இருப்பவரையும் எழும்பிக் குதிப்போட வைத்துவிடும். அதைப்போல் படைப்பாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் இந்நூல் பெண்மையின் கொதிப்புகளையும் தர்ம ஆவேசத்தையும் உள்ளடக்கியுள்ளது. 'தேசம் மிச்சமிருக்கட்டும்' என்ற தலைப்பில், மிச்சம் வைக்காமல் ஒரு கூட்டம் தேசத்தை மொய்த்துக் கொண்டிருக்கிறது என்ற ஒரு பொருள் உள்ளே புதைந்து கிடக்கிறது. மொய்க்கும் கும்பலுகுத் தனது எழுத்து வன்மையால், வண்மையால் சாட்டையடி கொடுக்கிறார் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள்.