சேகுவேரா தனது மனைவி, குழந்தைகள், பெற்றோர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதங்களில் சோகத்தின் சாயலைக் காணமுடியாது. அநீதி எங்கு நடைபெற்றாலும் அதனை எதிர்த்துப் போரிடுமாறு தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில் அறைகூவல் விடுத்துள்ளார். அவரது எண்ணம், கருத்து, செயல் எல்லாவற்றிலும் புரட்சித்தாகமும், லட்சிய நோக்கும் தெள்ளத் தெளிவாக இருந்ததை இந்த நூல் விளக்கிக் கூறுகின்றது. புரட்சி என்னும் இலட்சியப் பயணம் முடிவதில்லை என்பது குறித்து சேகுவேரா கூறிய கருத்துகளை இங்கு நினைவு கொள்ளல் அவசியமாகும்.
““நான் தோற்றுப் போகலாம்; அதன் பொருள், வெற்றி சாத்தியமற்றது எண்பதல்ல. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால் இறுதியில் எவரெஸ்ட் சிகரம் வெல்லப்பட்டது. இதுதான் உண்மை." உலகம் முழுதும் உள்ள புரட்சிகர இளைஞர்களின் நெஞ்சங்களில் இன்று மிகமிகப் பசுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் புரட்சியாளர்களில் சேகுவேரா முதலிடம் பெற்றுத் திகழ்கிறார். அவர் எழுதிய நூல்களும், அவரைப் பற்றி பிறர் எழுதிய நூல்களும் அதிக அளவில் விற்பனை ஆகிக்கொண்டிருப்பதே இதற்குச் சான்று எனலாம்.
சேகுவேரா மறைந்து சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. பன்முகத் தன்மை வாய்ந்த இளம் புரட்சியாளனான சேகுவேராவின் வாழ்க்கை, லட்சியம், போராட்டம் குறித்து அனைத்து அம்சங்களையும் தெரிந்துகொள்ளும் விதத்தில் இந்நூல் அமைந்துள்ளது.