இரண்டு நாவல்களும் எதார்த்த நடையில் எழுதபட்ட குடும்ப த்ரில்லர்கள். 19 வயது சொர்க்கம் - தன் காதலில் ஏற்பட்ட ஒரு பெரும் பிரச்சனைக்காக, துபாயில் இருந்து திரும்பும் ராஜகணேஷ்,நண்பன் ஜெயந்த்தின் உதவியை நாடுகிறான். ஜெயந்த்தும் அவன் மனைவி சூர்யநிலாவும் இருவரையும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதனால், இளம் தம்பதிக்கு அடுக்கடுக்கான பிரச்சனைகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களால் அதிலிருந்து வெளி வர முடிந்ததா ? காட்சிகள் பதைபதைப்பையும், வசனங்கள் நெஞ்சையும் நெகிழ வைக்கும். முதலில் காதல் கதையாக ஆரம்பித்து பின்பு குடும்ப கதையாக மாறி, பின்பு க்ரைம் திரில்லராக உருவெடுக்கிறது இந்த கதை. முடிவு, இளகிய மனதுடையோர் கண்களில் கண்ணீர் கசியவிடும் என்பதில் சந்தேகமில்லை. யமுனாவின் 48 மணிநேரம் - அழகான இளம்பெண் யமுனா, தன் தோழி சுவர்ணாவுடன் இரவு காட்சி படம் ஒன்றைப் பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியே வருகிறாள்.அந்த பேய் மழை பொழியும் இரவில் தன் தோழியோடு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு போக, ஆட்டோ ஒன்றில் பயணிக்க முடிவெடுக்கிறாள்.அந்த நேரத்தில் சுவர்ணா எடுக்கும் ஒரு சிறிய ஆனால் தவறான முடிவால், ஒரு பெரும் இழப்பு காத்துக் கொண்டிருந்ததை இருவரும் அiறிய வாய்ப்பில்லை. யமுனா,அடுத்த 48 மணி நேரம் தன் வாழ்க்கையையே புரட்டி போடும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டாள். எதிர்பாராத மனித ஓநாய்கள், ஆபத்தில் உதவும் மனிதர்கள்,சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்த உலகத்தை முதன் முதலாக சந்திக்கிறாள். திகில் மற்றும் திடுக்கிடும் பரபரப்பான சம்பவங்கள் நிறைந்த கதை.