ஹிந்துஸ்தானி இசையைப் பின்புலமாக வைத்து யுவன் சந்திரசேகர் எழுதும் மூன்றாவது நாவல் இது. இரண்டாவது நாவலான நினைவுதிர் காலம் வெளியாகி, பதினொரு ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது. இசையே பின்புலம் என்றாலும், முந்தைய நாவல்கள் சித்தரித்த உலகம் வேறு; இதில் நிகழ்வது முழுக்க வேறு. அவற்றின் நாயகர்கள் ஆண்கள். இது ஆறு பெண் கலைஞர்களைப் பற்றியது. முதலாவது நாவல் கானல் நதி வாழ்க்கை வரலாறுபோல அமைந்தது. இரண்டாவது நாவலின் வடிவம், முழு நேர்காணல். இந்த நாவல், தனித் தனிக் குறுநாவல்களின் தொகுப்புபோல அமைந்திருக்கிறது. ஒன்றிலொன்று பிணைந்த குறுநாவல்கள். இசை பற்றிய எண்ணங்களும், இசை வழங்கும் அனுபவங்களும், அதில் ஈடுபட்ட தனிமனங்களின் அல்லாட்டமும் நிஜம்போன்றே விவரிக்கப்படும் புனைவு. அந்த அளவில், முந்தைய நாவல்களை நினைவூட்டும் உள்ளோட்டமும், இடம்பெறும் அனைவருமே பெண்கள் என்பதால் தனித்துவமான உள்ளடக்கமும் கொண்டது.