நவக்கிரகங்கள் அண்டங்களின் இயக்கத்திற்கும், அவனியில் வாழும் ஒவ்வொரு மனிதரின் வாழ்வுக்கும், காரணகர்த்தாக்களாக விளங்குகின்றனர். உலகில் ஒரு குழந்தை பிறக்கும்போது சூரியன் அதன் பிராணனாக அந்த உடலுக்குள் நுழைகிறது. அதனாலேயே சூரியதேவன் ஆத்மகாரகன் என்று பெயர் பெறுகிறான். பிறகு மனமான சந்திரன் தோற்றமாகிறான். அதனால் சந்திரன் மனோகாரகன் என்று பெயர் பெறுகிறான். அதைத் தொடர்ந்து செவ்வாய் வீரத்தை வழங்க, புதன் வித்தையாக இணைகிறது. குரு கல்வியை வழங்க, சுக்கிரன் சுக போகங்களை அனுபவிக்கச் செய்கிறது. இவை அனைத்தையும் அனுபவிப்பதற்குரிய ஆயுளை சனி தருகிறது. இராகு இக வாழ்விற்குரியவைகளைத் தந்து யோககாரனாக விளங்க, கேது பரவாழ்வுக்குரிய தெய்வீக ஈடுபாட்டைத் தந்து ஞானகாரகனாகத் திகழ்கிறது.