மிக இளைய வயதிலேயே முதிர்ச்சியான மனமொன்றை இந்நாவலின் ஆசிரியர் குணா
கவியழகன் பெற்றிருக்கின்றார். பிறர் அனுபவங்களை, அவர்களின் குணவில்புகளை,
நடையுடை பாவனைகளை ஒரு பகுத்தாய்வு செய்யும் ஒரு பகுப்பாளனாக பயிற்சி
முகாமில் இருந்த போராளிகளை, அதன் பொறுப்பாளர்களை வருணிக்கும், மெல்லிய
நகைப்புடன் அவர் விபரிக்கும் பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது. அதேவேளை
எத்தகைய பல்வேறுபட்ட பின்புலங்களிலிருந்து போராளிகள் வருகின்றனர் என்கின்ற
கதையையும் வெளிவரச் செய்துவிடுகின்றார். வனத்தின் வனப்பையும் அதன்
தனிமையையும் – கத்தியால் வெட்டி எடுக்கக்கூடிய இருள் – என்றும் – காட்டின்
மௌனமும் அந்த மௌனத்தின் ஒலியும், காட்டின் இருளும் அந்த இருளின் ஒளியும் –
என்றும் அவர் சொற்களில் இட்டுக்கட்டும் விதம் இதுவரை காடுகள் பற்றி எழுதிய
எழுத்தாளர் வரிசையிலேயே அவரையும் சேர்த்துவிடத் தூண்டுகின்றது. நஞ்சுண்ட
காடு முழுவதும் ஒரு வலி பரவிக்கிடக்கின்றது. வாழ்வின் இருண்ட பக்கங்கள்,
வறுமை, இல்லாமை என்கின்ற பெரும் துயர், இதற்குள் வாழத்துடிக்கும் மனிதர்கள்
என வெகு யதார்த்தமான பதிவுகளின் தொகுப்பாகின்றது. மனிதத் தேடலின் ஒரு
பகுதிதான் நஞ்சுண்ட காடு. நஞ்சுண்ட காடு முழுவதும் இழையோடும் தத்துவ
விசாரங்கள் வாசிப்பாளனை பலவித கேள்விகளுக்கும், நெருக்கடிகளுக்கும்,
அந்தரத்திற்கும் உட்படுத்தி விடுகின்றன. ஏதோவொரு வகையான குற்றவுணர்வு
பரவுகின்றது. ‘புற மெய்மைகளை படிமங்களாக்கி நிஜஉலகின் உணர்ச்சிக்
கொந்தளிப்புக்களை வன்மையுடனும் இரத்தத்துடனும் சதையுடனும் உண்மைசொட்ட
யதார்த்தமாகத் தரும்போதே ஒரு படைப்பாளியின் படைப்பாளுமை, ஆக்க ஆளுமை
தெரியவரும்' என்பதற்கு கவியழகன் இந்நாவலில் சான்றாகிறார். க.வே. பாலகுமாரன்
*இயல் விருது - கனடா இலக்கியத்தோட்டம்*